Published : 18 Aug 2018 09:10 AM
Last Updated : 18 Aug 2018 09:10 AM

ரஷ்ய அதிபர் புதின் உட்பட உலக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் புதின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில், “இந்திய, ரஷ்ய நட்புறவுக்கு வாஜ்பாய் முக்கிய பங்காற்றினார். மிகச் சிறந்த அரசியல் தலைவர். அவரது மறைவுக்கு ரஷ்ய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் போம்பியா வெளியிட்ட இரங்கல் செய்தியில், “உலகின் பாதுகாப்பில் வாஜ்பாய் அக்கறை கொண்டிருந்தார். அவரது தொலைநோக்கு பார்வையால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக் காவும் பயன் அடைந்தன. அவரை இழந்து வாடும் இந்தியர்களுக்கு அமெரிக்க மக்களின் சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான் கூறியபோது, “இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும். இதுவே வாஜ்பாய்க்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியா, நேபாள உறவை வலுப்படுத்த வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்றென்றும் நினைவில் நிற்கும். அவர் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கை யில், ‘‘வாஜ்பாயின் மறைவு அதிர்ச்சி யளிக்கிறது. அவர் வங்கதேசத்தின் நண்பராக திகழ்ந்தார்” என்று கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியபோது, ‘‘இலங்கை தீவில் அமைதி, ஸ்திரத் தன்மையை ஏற்படுத்த வாஜ்பாய் முக்கிய பங்காற்றினார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மாலத் தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல்லா கயூம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில், “மாலத்தீவில் மனித வள மேம்பாட்டுக்கு வாஜ்பாய் பெரிதும் உதவினார். அவரது மாலத் தீவு வருகையை இப்போதும் நினைவுகூர்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மாலத் தீவு அரசு அலுவலகங்களில் இந்திய தேசிய கொடியும் மாலத்தீவு தேசிய கொடியும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

இஸ்ரேல் வெளியுறவுத் துறை உட்பட பல்வேறு நாடுகளின் தரப்பில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x