Published : 15 Aug 2018 10:17 AM
Last Updated : 15 Aug 2018 10:17 AM

72வது சுதந்திர தினம்: தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி நீண்ட உரை; பாரதியார், பெண்கள், நாட்டின் வளர்ச்சி குறித்து உத்வேகப்பேச்சு

நாட்டின் 72வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

செங்கோட்டையில் நாட்டின் மூவர்ணக் கொடியை பிரதமர் மோடி 5வது முறையாக ஏற்றி வைத்துள்ளார்.

இன்று காலை 7.30 மணிக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் வந்தார் பிரதமர் மோடி.

தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது அவர் கூறியதாவது:

நாட்டு மக்களுக்கு 72வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நான் இந்நாட்டு பெண்களை வணங்குகிறேன் நம் மகள்கள் அனைத்து 7 கடல்களையும் கடந்து மூவர்ணக்கொடியினால் உலகையே வண்ணமயமாக்கியுள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பழங்குடியின குழந்தைகளை வணங்குகிறேன். இவர்களால் இந்தியா பெருமையடைகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பற்றி...

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சமூகநீதிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிறபிற்படுத்தப்பட்டோருக்கான ஒபிசி கமிஷனுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை இந்த கூட்டத்தொடர் கண்டது. நாட்டின் பல இடங்களிலும் நல்ல பருவ மழை பெய்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் பல இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் உயிர்களை இழந்தோரது குடும்பத்தினருடன் என் எண்ணம் செல்கிறது. அவர்களுக்கு என் ஆழ்ந்த் அனுதாபங்கள்.

மகாகவி பாரதியரைத் தமிழில் குறிப்பிட்ட மோடி எல்லோரும் நல்முறை எய்தும் நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்றார். மகாகவி பாரதியார் எழுதியது போல் இந்தியா மகாதேசமாக உருவெடுப்பது மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் அகத்தூண்டுதலாக இருக்கும் என்றார், அனைத்து தடைகளையும் களைவது எப்படி என்பதை உலகிற்கு இந்தியா காட்டும் என்றார் என பிரதமர் மோடி பாரதியாரை மேற்கோள் காட்டினார்.

அனைவருக்கும் சமூக நீதி:

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தின் படி அனைவருக்கும் சமூக நீதி உள்ளது. இதனை உறுதி செய்து இந்தியா அதிவேகமாக வளர்ச்சி பெறுவதை உறுதி செய்வோம். ஏழைகளுக்கு நீதி கிடைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீது தாக்கு:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது மறைமுகத் தாக்குதல் தொடுத்த மோடி, “2013 ஆண்டு பின்னோக்கி இருந்த நமது நாட்டின் வளர்ச்சி இன்று முன்னேற்றமடைந்துள்ளது. 2013 போல் கழிவறைக் கட்டுவதோ, நாடு முழுதும் மின்சாரம் அளிக்கும் திட்டமோ நடந்திருந்தால் இன்னும் பத்தாண்டுகள் ஆகியிருக்கும் அவற்றை முடிக்க, ஆனால் அதனை இப்போது சாதித்திருக்கிறோம் என்பதில் பெருமை அடைகிறோம். எங்கிருந்து நாம் ஆரம்பித்தோம் என்று யோசித்தால் நம்பமுடியாத இடங்களுக்கு நாடு சென்றுள்ளதை நாம் கண்டுணர முடியும்.

தன் ஆட்சியின் ரிப்போர்ட் கார்டை வாசித்த மோடி:

கடந்த 4 ஆண்டுகளாக பாஜக அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார் மோடி.

புதிய தொழில்நுட்பத்துடன் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர்.சுய வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முத்ரா திட்டமித்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தொழிலதிபர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ஆபத்தில் இருந்து நாடு மீண்டுள்ளது.

சாலை, வான்வெளி, கடல்வெளி ஆகிய அனைத்திலும் தன்னிறைவு அடைந்து வருகிறோம். நாட்டின் கடைக்கோடி கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புக்களால் நமது விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியாவின் குரலை உலக நாடுகள் கேட்க துவுங்கி உள்ளன. விவசாயித்திலும் விஞ்ஞானத்தை இணைத்து வெற்றி காண்பதே இந்திய அரசின் குறிக்கோள். reform, perform and transform (சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்) இதுவே மத்திய அரசின் தாரகமந்திரம். 2022 க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியா என்ற யானை உறங்கிக் கொண்டிருந்த நிலை மாறி விட்டது. இப்போது யானை எழுந்து விட்டது. முதலீடுகள் மற்றும் தொழில்துவங்குவதற்கு ஏற்ற நாடாக இந்தியா மாறி உள்ளது.

வடகிழக்குப் பகுதிகள்

வடகிழக்குப் பகுதிகள் சமீப காலங்களாக நாட்டுக்கே தூண்டுதலாகத் திகழ்கின்றன. ஒரு காலத்தில் டெல்லியிலிருந்து அவை நீண்ட தொலைவில் எட்ட முடியாத தொலைவில் இருந்ததாகக் கருதப்பட்டது. இப்போது அவைகளை நாம் டெல்லியின் வாசற்படிக்குக் கொண்டு வந்துள்ளோம்.

வறுமை, தூய்மை இந்தியா:

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி பேர் வறுமைகோட்டிற்கு மேல் வந்துள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் இருமடங்காகி உள்ளது. மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கே உங்களின் வரிப்பயணம் பயன்படுத்தப்படுகிறது.

விளையாட்டு முதல் பார்லி., வரை பெண்களின் பங்கு பெருமைக்குரியது. சுப்ரீம் கோர்ட்டில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

முத்தலாக் பற்றி பிரதமர்:

முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் நாட்டை பெருமை அடையச் செய்துள்ளனர். பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

முத்தலாக் முறை முஸ்லிம் பெண்களுக்கு பெரிய அநீதி இழைத்து வருகிறது, நாங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்கிறோம். ஆனால் சிலர் அது முடியக் கூடாது என்று விரும்புகின்றனர். முஸ்லிம் பெண்களுக்கு உறுதி அளிக்கிறேன், உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பாடுபடுவேன்.

ஊழல்வாதிகளுக்கும், கறுப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பு இல்லை. கறுப்பு பணம் பதுக்வோரையும், ஊழல்வாதிகளையும் தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. பாலியல் குற்றங்கள் செய்வோர் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. பெண்களை மதிக்க பெற்றோர் கற்றுத்தர வேண்டும். ஆண்களைப் போல் பெண்களும் நிரந்தர அதிகாரம் பெறுவார்கள். நாட்டின் நலன் கருதியே அரசு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தன் உரையில் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x