Published : 31 Aug 2014 11:26 AM
Last Updated : 31 Aug 2014 11:26 AM
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தேசியப் பிரிவு நிர்வாகியும் மாநிலங்களவை உறுப்பினருமான அம்பேஜ் ராஜன், கட்சி அமைப்பு விதிகளின் கீழ் தேர்தலை நடத்தினார். இத்தேர்தல் நடைமுறைகளுக்குப் பிறகு கூடிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சித் தலைவராக மாயாவதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக் ப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்களும் நிர்வா கிகளும் மாயாவதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது கட்சியின் தலைமைப் பதவிக்கு தன்னை மீண்டும் தேர்வுசெய்ததற்கு நன்றி தெரிவித்த மாயாவதி, அனைவரின் ஆதரவுடன் கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக மாயாவதி பொறுப்பேற்பது இது 3-வது முறையாகும்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாநில வாரிய கட்சியின் வளர்ச்சி குறித்து மாயாவதி ஆய்வுசெய்தார். கட்சிக்கு மக்கள் ஆதரவை பெருக்குவது குறித்தும் விவாதித்தார்.
ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் தனித்துப் போட்டியிட மாயாவதி முடிவு செய்துள்ளார்.இது குறித்து இம்மாநில மூத்த தலைவர்களுடன் தேர்தல் வியூகம் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT