Last Updated : 01 Aug, 2018 08:18 AM

 

Published : 01 Aug 2018 08:18 AM
Last Updated : 01 Aug 2018 08:18 AM

பணி ஓய்வு பெற்றார் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி

இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.

கோவை மாவட்டம் கோதவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை படித்த இவர், 1982 -ம் ஆண்டு இஸ்ரோவில் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்) பணியில் சேர்ந்தார். கடந்த 36 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார்.

ஐஆர்எஸ்-1ஏ, இன்சாட்-2ஏ, இன்சாட்-2பி ஆகிய திட்டங்களில் இயக்க மேலாளராகவும், இன்சாட் -2சி செயற்கைக்கோள் திட்டத்தின் துணை இயக்குநராகவும், இன் சாட்-2டி, இன்சாட்-2இ, ஜிசாட்-1, இன்சாட்-3இ உள்ளிட்ட செயற் கைக்கோள் திட்டங்களில் திட்ட இயக்குநராகவும் இருந்துள்ளார்.

2004-ல் சந்திரயான் -1 திட்ட இயக்குநராக பொறுப்பேற்ற மயில்சாமி அண்ணாதுரை, 2008-ம் ஆண்டு, அந்த செயற்கைக்கோளை வெற்றி கரமாக‌ நிலவுக்கு செலுத்தினார். இதன் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்ற இவருக்கு, பல்வேறு விருதுகள் குவிந்தன. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வடிவமைப்பிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

தற்போது சூரியனை ஆய்வு செய்யும் திட்டமான ஆதித்யா மற்றும் சந்திராயன் 2 திட்டம் ஆகிய திட்டப் பணிகளிலும் மயில்சாமி அண்ணாதுரை ஈடுபட்டிருந்தார். கடந்த 2005 முதல் இஸ்ரோ மையத்தின் இயக்குநராக பொறுப்பு வகித்த அவர், நேற்று மாலையுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதற்கான பிரிவுபச்சார நிகழ்ச்சியில் இவருக்கு சக விஞ்ஞானிகளும், இஸ்ரோ ஊழியர்களும் வாழ்த்து கூறி பிரியாவிடை அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x