Published : 26 Aug 2018 08:51 AM
Last Updated : 26 Aug 2018 08:51 AM
கேரளாவில் ஜாதி, மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களாலும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் கேரளா கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில் இப்பண்டிகை அம்மாநில மக்களுக்கு புதிய தொடக்கமாக இருக்க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: ஓணம் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக கேரள சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். கடும் வெள்ளத்துக்கு பிறகு கேரள மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். கேரளாவில் உள்ள அனைவருக்கும் இந்தப் பண்டிகை புதிய தொடக்கமாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு: கேரளா முழுவதும் ஓணம் பண்டிகை 10 நாட்களுக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படும். படகுப் போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் முதல் அத்தப்பூ கோலங்கள், வீர விளையாட்டு போட்டிகள் வரை களை கட்டும். இந்தத் திருவிழா நாட்டில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஓங்கச் செய்யட்டும்.
பிரதமர் நரேந்திர மோடி: கேரள மக்கள் கடந்த சில நாட்களாக எதிர்கொண்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கான புதிய பலத்தை ஓணம் பண்டிக்கை அவர்களுக்கு அளிக்கும் என நம்புகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் தோளோடு தோள் சேர்ந்து கேரள மக்களுக்கு துணை நிற்கின்றனர். கேரள மக்களுக்கு இப்பண்டிகை மகிழ்ச்சியும் வளமும் சேர்த்திட இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: கேரள மக்களுக்கு இது ஒரு கடினமான நேரம். மாநிலம் முழுவதிலுமுள்ள நிவாரண முகாம்கள் மற்றும் வீடுகளில் மக்கள் தங்கள் விருப்பத்திற்குரியவர்களை எண்ணி வருந்தி வருகின்றனர். ஓணம் திருநாளில் நாம் அனைவரும் நமது வேறுபாடுகளை மறந்து, கேரளாவை மறுகட்டமைக்கும் பணியில் ஒன்றிணைந்து செயல்பட உறுதியேற்போம்.
பாஜக தலைவர் அமித்ஷா: கேரளா விரைவில் தனது முந் தைய நிலைக்கு திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன். இந்தக் கடினமான நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கேரள மக்களுக்கு துணை நிற்கின்றனர். கேரள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப மத்தியில் உள்ள மோடி அரசும் பாஜகவும் இயன்ற அனைத்து உதவிகளும் செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT