பிஹார் மாநிலம் முசாபர்பூரில் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கு 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்: உ.பி. தலைநகர் லக்னோவில் ஒரு சிறுமி மீட்பு

பிஹார் மாநிலம் முசாபர்பூரில் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கு 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்: உ.பி. தலைநகர் லக்னோவில் ஒரு சிறுமி மீட்பு
Updated on
1 min read

முசாபர்பூர் காப்பகத்தில் சிறுமி கள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன 4 சிறுமி களில் ஒரு சிறுமியை லக்னோவில் போலீஸார் மீட்டுள்ளனர்.

பிஹார் மாநிலம் முசாபர்பூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப் பட்டது.

இதையடுத்து அரசு உதவி பெறும் அந்தக் காப்பகத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாக்குர் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடமை தவறியது, அலட்சியமாக செயல்பட்ட குற்றத்துக்காக சமூக நலத்துறையைச் சேர்ந்த 6 உதவி இயக்குநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முசாபர்பூர், போஜ்பூர், முங்கர், அராரியா, முதுபானி, பாகல்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சமூக நலத்துறை உதவி இயக்குநர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தின் சமூக தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காப்பகத்தில் காணாமல் போன 4 சிறுமிகளில் ஒரு சிறுமியை உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் போலீஸார் மீட்டுள்ளனர். மற்ற 3 சிறுமிகள் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in