Published : 01 Aug 2018 08:15 AM
Last Updated : 01 Aug 2018 08:15 AM

போக்குவரத்து வசதி இல்லாததால் கர்ப்பிணியை 12 கி.மீ தூக்கி சென்ற அவலம்: இறந்து பிறந்தது ஆண் குழந்தை

ஆந்திராவில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால், 12 கி.மீ தூரம் வரை அவரது கணவர் மற்றும் கிராமத்தினர் தூக்கி சென்றனர். ஆனால், இதற்குள் வழியி லேயே ஆண் குழந்தை இறந்தே பிறந்தது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில், பழங்குடியினத்தினர் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பல கிராமங்களுக்கு இன்றும் போதிய சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதிகள் இல்லை. இதனால், பல கி.மீ. தொலைவிற்கு வந்து இவர்கள் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

இதேபோன்று கல்வி கற்கவும் மாணவ, மாணவியர் பல கி.மீ நடந்து செல்லும் அவலமும் தினமும் நடக்கிறது. இந்நிலையில், ஜிந்தம்மா (22) எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இவரை சுமார் 12 கி. மீ தூரம் வரை இவரது கணவர் மற்றும் கிராமத்தினர், ஒரு மூங்கில் கூடையில் சுமந்து சென்றனர்.

ஆனால், வழியிலேயே ஜிந்தம்மாவிற்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் சற்று நேரம் நிற்க வேண்டி வந்தது. அந்த சமயத்தில் ஜிந்தம்மாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால், அக்குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின்னர், ஜிந்தம்மாவை மீண்டும் மூங்கில் கூடையில் சுமந்து சென்று மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு ஜிந்தம்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உரிய நேரத்தில் ஜிந்தம்மாவை மருத்துவமனைக்கு கொண்டு போயிருந்தால், குழந்தை இறந்திருக்காது என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்துக்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் துயரமும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x