Last Updated : 01 Aug, 2018 03:42 PM

 

Published : 01 Aug 2018 03:42 PM
Last Updated : 01 Aug 2018 03:42 PM

‘ஜிலா கோரக்பூர்’ திரைப்படத்துக்கு எதிராக வழக்குகள் பதிவு: உ.பி. முதல்வர் யோகியின் வாழ்க்கை வரலாறு எனப் புகார்

 

'ஜிலா கோரக்பூர்' பெயரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறு படமாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் முதல் சுவரொட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதன் மீது ஏழு வழக்குகள் பதிவாகி உள்ளன.

’இந்தப் படத்தில் வரும் சம்பவம் உண்மை அல்ல. முழுக்க, முழுக்கக் கற்பனையே’ என்ற அறிமுகத்தில் முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகும் காலம் இது. இந்த வகையில், சமீபத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு 'சஞ்சு' எனும் பெயரில் இந்தி திரைப்படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும் பாலிவுட்டில் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. இதனிடையில், பாஜக ஆளும் உ.பி. முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறும் இந்தி திரைப்படமாகத் தயாராகி உள்ளது. இதன் முழுமைப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில், 'ஜிலா கோரக்பூர்' படத்தின் முதல் சுவரொட்டி கடந்த ஞாயிறு அன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. தற்போது வைரலாகி வரும் இந்த சுவரொட்டியில் மொட்டை தலையுடன் காவி உடை அணிந்த ஒரு சாது பின்புறமாகக் கைகட்டி நிற்கிறார்.

அவரது அருகில் கோரக்பூரின் பாபா கோரக்நாத் கோயிலின் ஓரு பகுதி வரையப்பட்டுள்ளது. இதில், யோகி ஆதித்யநாத்தை போல் சித்தரிக்கப்பட்டுள்ள சாதுவின் ஒரு கையில் கைத்துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே அப்படம் சர்ச்சைக்குள்ளாகக் காரணமாகி விட்டது.

ஏனெனில், கோரக்நாத் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான மடத்தின் பீடாதிபதியாகவும் யோகி இருந்து வருகிறார். அவரது கையில் துப்பாக்கியை கொடுத்திருப்பது கடும் எதிர்ப்புகளை உருவாக்கி உள்ளது. இதனால், அப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாக உ.பி. பாஜகவின் நிர்வாகியான ஐ.பி.சிங் இந்த திரைப்படம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து ஐ.பி.சிங் கூறும்போது, ''இப்படத்தினை தயாரிக்க பணம் கிடைத்தது எப்படி என விசாரணை நடத்தப்பட வேண்டும். புண்ணியத்தலமான கோரக்பூரின் பெயரையும் கெடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்படத்தை எக்காரணம் கொண்டும் வெளியிட பாஜக அனுமதிக்காது'' எனத் தெரிவித்தார்.

லக்னோவின் ஹசரத்கன்சி காவல் நிலையத்தில் ஐ.பி.சிங் புகாரின் பெயரில் 'ஜிலா கோரக்பூர்' படத்தின் இயக்குநரான வினோத் திவாரியின் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் படுகொலைகளை மையமாக வைத்து அதன் கதை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கும் களங்க ஏற்படுத்த அவரைப் போல் ஒரு கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

இப்புகார் ஏற்கப்பட்டு ஐபிசி153(ஏ), 295(ஏ), 500, 501, 503, 507 மற்றும் 66(ஏ) ஆகிய ஏழு வழக்குகள் பதிவாகி உள்ளன. இப்படத்தினை எதிர்த்து மேலும் பல பாஜகவினர் உ.பி.யின் வேறு சில மாவட்டங்களிலும் வழக்குப் பதிவு செய்யத் தயாராகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x