Published : 02 Aug 2018 08:22 AM
Last Updated : 02 Aug 2018 08:22 AM
ஈரானில் சிக்கித் தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில், தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் கடந்த 6 மாதங்களாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், முறையான ஊதியம் வழங்காததால் சிரமப்பட்டு வந்த அவர்கள், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு அவர்களுடைய முதலாளி அனுமதி அளிக்காததால், இதுகுறித்து தமிழகத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தங்களை மீட்க உதவுமாறு அரசுக்கும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து, மீனவர்களின் உறவினர்கள் இதுகுறித்து தமிழக அரசிடம் புகார் செய்துள்ளனர். இதன் அடிப்படையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடந்த மாதம் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரானில் சிக்கித் தவித்த 21 மீனவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் வரும் 3-ம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT