

திமுக தலைவர் கருணாநிதி மனைவி தயாளு, அக்கட்சி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 10 பேருக்கு அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லியில் பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த ஊழலில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன் கிளை நிறுவனங்கள் வழியாக ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த பண பரிமாற்றம் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருவதால், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, கருணாநிதி உறவினர் அமிர்தம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகிய 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதவிர, ஸ்வான் டெலிகாம், கலைஞர் டிவி, சினியுக் மீடியா, டிபி ரியால்டி உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி, தயாளு உள்ளிட்ட 10 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். வயோதிகம் காரணமாக இந்த வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்கும்படியும் தயாளு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி, அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி, அமிர்தம், சாகித் பல்வா, கரீம் மொரானி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். ஜாமீன் பெற ரூ.5 லட்சம் பிணைத்தொகை மற்றும் 2 பேர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, தயாளு தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அதிகாரிகளை விசாரிக்க மனு
இதனிடையே, அமலாக்கப் பிரிவு புதிய வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அளித்த ஆதாரங்கள் அடிப்படை யில் நடத்திய விசாரணையில், 2ஜி வழக்கு குறித்து புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக சிபிஐ சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில், அமலாக்கப்பிரிவு துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குநர் சத்யேந்திர சிங், தகவல் ஒலிபரப்புத்துறை சார்பு செயலர் நவிகபூர், வங்கி அதிகாரி டி.மணி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி 2ஜி வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. கலைஞர் டிவி பொதுமேலாளர்(நிதி) ஜி.ராஜேந்திரன் ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சியம் அளித்துள்ளார். அவரை மீண்டும் அழைத்து சில தகவல்களை விசாரிக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இம்மனு மீது வரும் செப்டம்பர் 1-ம் தேதி விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.