Published : 04 Aug 2018 03:29 PM
Last Updated : 04 Aug 2018 03:29 PM

நகைக்கடையில் துப்பாக்கிமுனையில் கொள்ளை முயற்சி: அச்சமின்றி இருவரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்

மும்பையில் முக்கிய சாலையில் தங்க நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கொள்ளையடிக்க முயன்ற கும்பலை அப்பகுதி மக்கள், விரட்டிப் பிடித்தனர். அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டபோதும், அச்சமின்றி சுற்றி வளைத்த மக்கள், கொள்ளையர்களுக்கு தர்மஅடி கொடுத்து போலீஸார் வசம் ஒப்படைத்தனர்.

மும்பை தோம்விலி பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் நிஹார். அவர் நேற்று இரவு 10 மணியளவில் தனது கடையை பூட்டிவிட்டு வெளியே கிளம்பினார். அன்று முழுவதும், கடையில் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை கைப் பையில் வைத்திருந்தார்.

தனது மோட்டார் சைக்கிளை நோக்கி சில அடிகள் அவர் நடந்தபோது, திடீரென அங்கு வந்த இருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். கையில் உள்ள பணத்தை கொடுக்கவிட்டால் சுட்டுக்கொன்று விடுவதாக கூறினர்.

இதனால் அதிர்ந்துபோன நிஹார் அந்த இடத்தைவிட்டு ஓடினர். கொள்ளையர்களும் துப்பாக்கியுடன் அவரை துரத்திக் கொண்டு ஓடினர். உதவிகேட்டு அலறியபடியே அவர் சாலையில் ஓடினார். இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் திரும்பி பார்த்தனர். அந்த பகுதியில் கடை வைத்திருந்த பலருக்கும் நிஹாரை தெரியும் என்பதால் அவருக்கு ஏதோ அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் உதவிக்கு ஓடினர் வந்தனர். பெருங்கூட்டமாக பலரும் அங்கு வந்தால் திகைத்துப்போன கொள்ளையர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் குண்டு யார் மீதும் படவில்லை.

இதையடுத்து அங்கிருந்துவர்கள் பயப்படாமல் விரட்டிச் சென்று அவர்கள் இருவரையும் பிடித்தனர். கொள்ளையர்கள் இருவரையும் கூட்டத்தினர் சரமாரியாக தாக்கினர். அடித்து உதைத்து தர்மஅடி கொடுத்தனர். அதற்குள்ளாக கூட்டத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தந்தனர்.

திலக் நகர் போலீஸார் விரைந்து வந்து கொள்ளையர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர்கள் இவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவர் மீது கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ‘‘நிஹார் நகைக்கடையை நீண்டநாட்களாகவே வேவுபார்த்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். மக்கள் விரட்டிப்பிடித்ததால் சிக்கியுள்ளனர்’’ எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x