

புதுடெல்லி: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பிஎப்ஐ அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
மேலும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த வழக்கில் இதுவரை பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அத்துடன் ரூ.62 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கி இருந்தது.
இந்நிலையில், பிஎப்ஐ மற்றும் அதன் அரசியல் கட்சியுடன் (எஸ்டிபிஐ) தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு சொந்தமான மேலும் ரூ.67 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான சொத்துகள் கேரளாவில் உள்ளன. இத்துடன் இந்த வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.129 கோடியாக அதிகரித்துள்ளது.