Published : 03 Nov 2025 08:15 AM
Last Updated : 03 Nov 2025 08:15 AM
பாட்னா: பிஹார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிஹார் தேர்தல் வரும் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் -29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் -எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்த சூழலில் பிஹார் தேர்தல் குறித்து ஜேவிசி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பிஹார் தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 120 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக்கூடும்.
இதில் பாஜக 70 முதல் 81 தொகுதிகளை கைப்பற்றும். அந்த கட்சி பிஹார் தேர்தலில் அதிக இடங்களை பெறும் கட்சியாக இருக்கும். ஐக்கிய ஜனதா தளத்துக்கு 42 முதல் 48 இடங்கள் கிடைக்கும். லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் கட்சிக்கு 5 முதல் 7, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு 2, ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 2 இடங்கள் கிடைக்கும்.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கு 93 முதல் 112 தொகுதிகள் வரை கிடைக்கும். இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 69 முதல் 78 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும். காங்கிரஸுக்கு 9 முதல் 17 இடங்கள் கிடைக்கலாம். இந்திய கம்யூனிஸ்ட் -எம்எல் கட்சிக்கு 12 முதல் 14, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் கிடைக்கும்.
ஜன் சுராஜ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெறக்கூடும். ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட இதர கட்சிகள் 8 முதல் 10 இடங்களை கைப்பற்றக்கூடும். இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT