

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மர்ஹௌரா தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையின் போது லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மர்ஹௌரா தொகுதியில் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சீமா சிங் சமர்ப்பித்த ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக தேர்தல் அதிகாரி அவரது வேட்புமனுவை நிராகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எல்ஜேபி (ராம் விலாஸ்) கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த சூழலில், அக்கட்சியின் ஒரு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பிஹார் தேர்தலில் பாஜக மற்றும் ஜேடியு கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களில் போட்டியிடுகிறது. உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) மற்றும் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.