

புதுடெல்லி: சர்வதேச கல்வி மற்றும் திறன் தொடர்பான ‘வீபாக்ஸ்’ அமைப்பு ‘இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் - 2025’ஐ வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு கடந்த 7 ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு தேர்வில் 45.6 சதவீத பெண்கள் வேலைக்கு தகுதியானவர்களாக இருந்துள்ளனர். நடப்பாண்டில் இது 47.53 சதவீதமாக உள்ளது. இது வேலைவாய்ப்புகளில் உள்ள முன்னேற்றம் மற்றும் சவால்களுக்கு பெண்கள் தயாராவதையே காட்டுகிறது.
அதேநேரத்தில் இந்த மாநிலத்தில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பெண்கள் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர். அவற்றில் முக்கியமாக 10 மாநிலங்களை அவர்கள் தேர்வு செய்கின்றனர். அதில் ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய 10 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு மேற்கூறிய மாநிலங்களில் சமூக, பொருளாதார மாற்றங்களும் காரணங்களாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.