“தவறான ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளாக நாடு கொள்ளையடிக்கப்பட்டது” - பூபேஷ் பாகேல் விமர்சனம்

“தவறான ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளாக நாடு கொள்ளையடிக்கப்பட்டது” - பூபேஷ் பாகேல் விமர்சனம்
Updated on
1 min read

ராய்ப்பூர்: கடந்த எட்டு ஆண்டுகளாக தவறான ஜிஎஸ்டி வரியால் மத்திய பாஜக அரசு மக்களை கொள்ளையடித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஷ்கர் மாநில முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேல் குற்றம் சாட்டினார்.

ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 8 ஆண்டுகளாக தவறான ஜிஎஸ்டியை விதித்து நாடு கொள்ளையடிக்கப்பட்டது. வணிகங்கள் அழிக்கப்பட்டன, சாதாரண மக்களின் வருமானம் மிகவும் குறைந்து போனது.

அவர்கள் 'ஒரே நாடு ஒரே வரி' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள், ஆனால் ஐந்து அடுக்கு வரிகளை விதித்தனர். இதனால் வணிகங்கள் அழிக்கப்பட்டன. இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகுதான் விலைவாசி மிகவும் அதிகரித்துவிட்டன என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பாஜக, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வணிகங்களுக்கு உதவுதல் என்ற வாக்குறுதிகளை அளித்தனர். இப்போது மீண்டும் அதையே பேச ஆரம்பித்துள்ளனர். ஜிஎஸ்டி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்று அவர்கள் முன்பு சொல்லி வந்தனர். இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் அதே விஷயத்தை திரும்பவும் சொல்கிறார்கள். பிரதமர், தான் பேசிய சொந்த உரைகளை மீண்டும் பார்க்க வேண்டும், அவர் அன்றும் இன்றும் அதையே சொல்கிறார்.

இதன் பொருள் என்னவென்றால், அவருக்கு பொருளாதார நிலைமை பற்றிய புரிதல் இல்லை. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மக்கள் எவ்வளவு சேமிப்பார்கள்? ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 115 ரூபாய் சேமிப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது, இதனால் என்ன நடக்கும்?. மக்கள் மாதத்திற்கு 115 ரூபாயை வைத்து என்ன செய்வார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in