

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில ஆளுநர் ராமன் தேகா, பிரதமர் நரேந்திர மோடியின் காச நோய் (டி.பி.) இல்லா இந்தியா பிரச்சாரத்தை துரிதப்படுத்தி வருகிறார். அவ்வப்போது இந்த பிரச்சாரத்தின் நிலை பற்றி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
மேலும் ராஜ்நந்த்கான், பஸ்தார், தாம்தாரி மற்றும் காரியாபந்த் ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் காச நோயாளிகளை ராமன் தேகா ஏற்கெனவே தத்தெடுத்திருந்தார். ஆளுநராக பொறுப்பேற்று ஒரு வருடம் முடிந்த நிலையில் மாநிலத்தில் மீதம் உள்ள மாவட்டங்களில் சிகிச்சை பெறும் காச நோயாளிகளையும் தத்தெடுத்துள்ளார். இதன்மூலம் நிக்ஷய் மித்ரா அந்தஸ்து பெற்ற அவர், தத்தெடுத்த நோயாளிகள் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. காச நோயாளிகளை தத்தெடுப்பவர்களுக்கு நிக் ஷய் மித்ரா பட்டம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.500 நிதி வழங்கி வருகிறார். காச நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நிதியுதவியை அவர் வழங்கி வருகிறார். காச நோயாளிகளை தத்தெடுக்க தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.