காவிரியில் தமிழகத்துக்கு 1.20 லட்சம் கன அடி நீர் திறப்பு

காவிரியில் தமிழகத்துக்கு 1.20 லட்சம் கன அடி நீர் திறப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று வீராஜ்பேட்டை, மடிகேரி ஆகிய இடங்களில் 148 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று மாலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கன‌ அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 124.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்துவருவதால் கபிலா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 142 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் காவிரி கரையோர கிராமங்களில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in