நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸின் தாஜா செய்யும் கொள்கையே காரணம்: யோகி ஆதித்யாநாத்

நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸின் தாஜா செய்யும் கொள்கையே காரணம்: யோகி ஆதித்யாநாத்
Updated on
2 min read

லக்னோ: நாட்டின் பிரிவினைக்கும், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்கள் சந்தித்த துயரங்களுக்கும் காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த தாஜா செய்யும் கொள்கையே காரணம் என்று யோகி ஆதித்யாநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், உத்தரப் பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யாநாத் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பிரிவினை துயர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியின் தாஜா செய்யும் அரசியல் கொள்கைதான் காரணம். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நமது நாட்டின் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராளிகளில் பலர் தூக்கிலிடப்பட்டனர். பலர் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு ஆளானார்கள்.

ஆனால், 1947-ல், நாம் சுதந்திரம் பெற்றபோது அதற்கு ஒரு நாள் முன்பு, காங்கிரஸ் தலைமை தாஜா செய்யும் அரசியலின் உச்ச நடவடிக்கையாக நாட்டைப் பிரித்தது. இந்தியப் பிரிவினைக்கு சற்று முன்பு வெடித்த கலவரங்கள் உலகின் மிக மோசமான அட்டூழியங்களில் ஒன்றாகும். மேற்கு பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் பகுதிகளிலிருந்து இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பவுத்தர்களை ஒழிக்க திட்டமிட்ட பிரச்சாரங்கள் நடந்தன. அப்போதைய காங்கிரஸ் தலைமைதான் அதற்குக் காரணம், அவர்கள் கடைப்பிடித்த தாஜா செய்யும் கொள்கைதான் காரணம்" என்று குற்றம் சாட்டினார்.

முன்னதாக, பிரிவினை துயரத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், "நமது வரலாற்றின் அந்த துயரமான அத்தியாயத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த திடீர் வன்முறையையும் வலியையும் நினைவுகூரும் வகையில், இந்தியா #PartitionHorrorsRemembranceDay-ஐ அனுசரிக்கிறது. அவர்களின் மன உறுதியை போற்றும் நாளாகவும் இது அமைகிறது. கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொள்வதற்கான அவர்களின் திறனும், அத்தகைய ஒரு சூழலிலும் புதிதாகத் தொடங்குவதற்கான அவர்களின் தேடலும் போற்றுதலுக்குரியவை.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளனர். நமது நாட்டை ஒன்றிணைக்கும் நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது நீடித்த பொறுப்பை இந்த நாள் நினைவூட்டுகிறது" என்று தெரிவித்திருந்தார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள செய்தியில், "#PartitionHorrorsRememberanceDay என்பது நாட்டின் பிரிவினையை நினைவுகூர்ந்து அந்த துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு நாள். இந்த நாளில், நாட்டை துண்டு துண்டாகப் பிரித்து, பிரிவினை வன்முறை, சுரண்டல் மற்றும் அட்டூழியங்களுக்கு வழிவகுத்து இந்தியத் தாயை புண்படுத்தியது காங்கிரஸ்.

பிரிவினையால் கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்கள் அனைவரையும் மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். பிரிவினையின் இந்த வரலாற்றையும் வலியையும் நாடு ஒருபோதும் மறக்காது. பிரிவினையின் இந்த பயங்கரத்தால் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள பதிவில், "#PartitionHorrorsRememberanceDay நாளில், புத்தியின்றி நிகழ்ந்த பிரிவினையாலும், அதனால் ஏற்பட்ட கொடூர வன்முறையாலும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கும், இந்தியாவில் உதவியற்ற பிரிவினை அகதிகளாக தங்கள் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த என் பெற்றோர் உள்ளிட்ட அதிசயமாக உயிர் பிழைத்தவர்களுக்கும் நான் அஞ்சலியை செலுத்துகிறேன். பிரிவினையின் கொடூரங்கள் எப்போதும் நினைவில் இருக்கும்" என தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in