இந்திய நீதி அறிக்கை 2025: முதல் 5 இடங்களைப் பிடித்த தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள்!

இந்திய நீதி அறிக்கை 2025: முதல் 5 இடங்களைப் பிடித்த தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள்!
Updated on
1 min read

புதுடெல்லி: காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை, சட்ட உதவி உள்ளிட்டவற்றின் அடிப்படையிலான நீதி மதிப்பீட்டில் நாட்டின் 18 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 5-ம் இடம் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களை தென் மாநிலங்களே பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நீதி அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை, சட்ட உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம் மக்களுக்கு நீதி வழங்குவதில் மாநிலங்களின் தர நிலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், முதல் 6 இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்கள் சிறப்பானவை என்றும், அடுத்த 6 இடங்களைப் பெற்ற மாநிலங்கள் சுமாரானவை என்றும் கடைசி 6 இடங்களைப் பெற்ற மாநிலங்கள் மோசமானவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, நாட்டின் 18 பெரிய மாநிலங்களில் கர்நாடகா, 10-க்கு 6.78 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் 6.32 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும், தெலங்கானா 6.15 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 6.09 புள்ளிகளுடன் கேரளா 4-ம் இடத்தையும், 5.62 புள்ளிகளுடன் தமிழ்நாடு 5-ம் இடத்தையும், 5.54 புள்ளிகளுடன் சத்தீஸ்கர் 6-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

5.42 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் மத்தியப் பிரதேசமும், 5.41 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் ஒடிசாவும், 5.33 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் பஞ்சாபும் உள்ளன. மகாராஷ்டிரா 5.12 புள்ளிகளுடன் 10-ம் இடத்தையும், குஜராத் 5.07 புள்ளிகளுடன் 11-ம் இடத்தையும், ஹரியானா 5.02 புள்ளிகளுடன் 12-ம் இடத்தையும் பெற்றுள்ளன.

13-ம் இடத்தை பிஹாரும் (4.88), 14-ம் இடத்தை ராஜஸ்தானும்(4.83), 15-ம் இடத்தை ஜார்க்கண்ட்டும்(4.78), 16-ம் இடத்தை உத்தராகண்டும்(4.41), 17-வது இடத்தை உத்தரப்பிரதேசமும்(3.92), 18-வது இடத்தை மேற்கு வங்கமும்(3.63) பெற்றுள்ளன.

ஏழு சிறிய மாநிலங்களில் சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேகாலயா, மிசோரம், கோவா ஆகிய மாநிலங்கள் ஒன்று முதல் 7 வரையிலான இடங்களைப் பெற்றுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in