Published : 28 Jul 2018 02:51 PM
Last Updated : 28 Jul 2018 02:51 PM

பிஹார் காப்பகத்தில் பாலியல் பலாத்காரம்: மேலும் 5 சிறுமிகளுக்கு நடந்த கொடுமை

பிஹார் மாநிலத்தில் காப்பகத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் மேலும் 5 சிறுமிகளுக்கு இந்த கொடுமை நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

முஸாபர்நகரில் அரசு நிதி உதவியுடன் சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 44 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் 29 சிறுமிகளை அங்குப் பணியாற்றும் ஊழியர்களே பலாத்காரம் செய்துள்ளனர் என்றும், அதில் சிறுமியை அடித்துக்கொன்று புதைத்துவிட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இதையடுத்து மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதையடுத்து மாநில சமூக நீதித்துறைக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்து விசாரணையைத் தொடங்கியது. இங்கிருக்கும் சிறுமிகளிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தியதில், 29 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி, பெண் ஊழியர்கள் என மொத்தம் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுமிகள் சித்தரவதை செய்யப்பட்டதாகவும், சிலர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர், இங்கு மீட்கப்பட்ட சிறுமிகள் வேறுவேறு காப்பகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்தக் காப்பகமும் சீல் வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் பீஹார் மட்மட்டுமின்றி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் அந்த காப்பகத்தில் இருந்த  சிறுமிகளுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் மேலும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பீஹார் போலீஸார் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x