சத்தீஸ்கரில் ஆள்கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் ஆள்கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்
Updated on
1 min read

ராய்ப்பூர்: கடந்த 25-ம் தேதி சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ், துர்க் பகுதியை சேர்ந்த சுக்மன் மாண்டவி, கமலேஸ்வரி, லலிதா, சுக்மதி ஆகிய 6 பேர் நின்றிருந்தனர்.

அப்போது பஜ்ரங் தளம் தொண்டர்கள் அங்கு வந்து பழங்குடியினத்தை சேர்ந்த கமலேஸ்வரி, லலிதா, சுக்மதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து உள்ளூர் காவல் நிலையத்தில் பஜ்ரங் தளம் தரப்பில் ஆள் கடத்தல் மற்றும் மத மாற்ற புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ், சுக்மன் மாண்டவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடைய ஜாமீன் மனுக்களை பிலாஸ்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்ற நீதிபதி சிராஜுதீன் குரேஷி முன்பு நேற்று விசாரித்தார். பின்னர், 3 பேரும் ஜாமீன் வழங்கினார். 3 பேரும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும். ஜாமீன் தொகையாக தலா ரூ.50,000 செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in