Published : 25 Aug 2014 10:00 AM
Last Updated : 25 Aug 2014 10:00 AM

பெற்றோர் முன்னிலையில் பெண் சுட்டுக்கொலை: போடோலாந்து தீவிரவாதிகள் அட்டூழியம்

காவல் துறையினருக்குத் தகவல் கொடுப்பவர் என்ற சந்தேகத்தின் பேரில் 16 வயது பெண் ஒருவரை அவரின் பெற்றோர் முன்னிலையில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத் தீவிரவாதிகள் (சாங்பிஜித்) சுட்டுக்கொன்றனர்.

அசாம் மாநிலம் சிராங் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. உயிரிழந்த அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கும் படக்காட்சி ஒன்று சனிக்கிழமை இரவு தொலைக்காட்சிகளில் வெளியானதைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் அசாம் மாநில தொழில்துறை அமைச்சர் பிரத்யுத் கூறும்போது, "இரண்டு நாட்களாக இந்தப் பெண்ணின் உடல் காட்டில் கிடந்தது, அச்சம் காரணமாக அந்தச் சடலத்தை அவரின் பெற்றோர் மீட்க முயற்சிக்கவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.

ஆகஸ்ட் 20-ம் தேதி காவல் துறையினருடனான மோதலில் ஐந்து போடோலாந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகே இந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. காவல் துறைக்குத் தகவல் கொடுப்பவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அந்தப் பெண்ணைக் கொல்லும் வீடியோ காட்சி மூலம் தங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கும் இதே நிலைதான் என்று தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் பெயரில் வீரதீரச் செயல்கள் புரிந்தவர்களுக்காக விருது வழங்கப்படும் என்று அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய் தெரிவித்துள்ளார். தவிர, இந்த ஆண்டுக்கான தேசிய வீரதீர விருதுக்கு அந்தப் பெண்ணின் பெயர் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்கவும் அவர் முன்வந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x