Published : 19 Jul 2018 07:56 PM
Last Updated : 19 Jul 2018 07:56 PM

நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகள், கிராமங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது: ஜிதேந்திர சிங் விளக்கம்

நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, அருகில் உள்ள கிராமங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று ஜாய்ஸ் ஜார்ஜ் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஜிதேந்திர சிங் பதிலளித்துப் பேசியதாவது:

''நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. வன உயிரின அனுமதி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள உயர் ஆற்றல் இயற்பியலுக்கான நிறுவனங்களுக்கு இடையிலான மைய வளாகத்தில் இதற்காக 85 டன் எடை கொண்ட சிறிய வகை மாதிரி உணர்த்துக்கருவி அமைக்கப்பட்டு வருகிறது.

தோராயமாக 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பைப் பயன்படுத்தி சுரங்கமும், ஆய்வுக்கூடமும் அமைக்கப்படும். இதனை அமைக்க 3 ஆண்டுகள் ஆகும். விநாடிக்கு ஒரு மில்லி மீட்டர் என்ற ஏற்கத்தக்க அளவுக்கு குறைவாகவே அதிர்வு இருக்கும். குடைந்து எடுக்கப்படும் பாறையின் அளவு 2,30,000 கன மீட்டர் அளவுக்கு பாறை குடைந்து எடுக்கப்படும். இதே தூரத்திற்கு ரயில்வே அல்லது சாலை சுரங்கங்களை தோண்டும் போது எடுக்கப்படும் பாறையின் அளவுக்கே இது இருக்கும்.

சில மீட்டர் தூரத்துக்கு அப்பால், உணர முடியாத அளவுக்கு, அதிர்வு மிகவும் குறைவாக்கப்படும். ஆய்வகம் அமையும் இடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள வைகை, முல்லைப் பெரியாறு அணைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உண்மையில், சில கிலோமீட்டர் தூரத்தில் அருகில் உள்ள கிராமங்களில் கூட இந்த அதிர்வு உணரப்பட மாட்டாது.

நியூட்ரினோ ஆய்வகப் பகுதியில் பணி நடக்கும் போது, பூமி அதிர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இருப்பினும், ஆய்வகம் அமைக்கும் பணியின் போது முன்னெச்சரிக்கை உணர்வுடன் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்''.

இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x