Published : 18 Jul 2018 08:41 PM
Last Updated : 18 Jul 2018 08:41 PM
மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ''எங்களிடம் எண்ணிக்கை இல்லை என யார் சொன்னது?'' என எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை மக்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. அதன் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. தற்போது மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லை எனக் கருதப்படுகிறது. இதன் மீது சோனியாவிடம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கான பதிலில் எதிர்கேள்வி கேட்ட சோனியா, ''நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும். எங்களிடம் எண்ணிக்கை இல்லை என யார் சொன்னது?'' என்றார். இதன்மூலம், எதிர்க்கட்சிகளின் வலிமையும், கருத்து வேற்றுமைகளும் தெரியும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், தன் மீதான எதிர்க்கட்சிகள் புகார்களுக்கு மத்திய அரசு அளிக்கும் பதில் அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலில் பலன் தரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதேசமயம், தெலுங்கு ராஷ்டிரிய சமிதி, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் வேறுபல பிரச்சினைகளை முன்வைத்து அமளி செய்து வந்தனர். இதனால், மக்களவை சபாநாயகர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்காமல் இருந்தார்.
இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் ஆறு மக்களவை உறுப்பினர்கள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வேண்டி கடிதம் அளித்திருந்தனர். இதில் முதலாவதாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் கேசினேனி ஸ்ரீநிவாஸ் அளித்தார். இவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்கட்சிகளின் 50 உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT