Published : 21 Jul 2018 02:17 PM
Last Updated : 21 Jul 2018 02:17 PM
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் அநீதி இழைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக 24-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசியதை தொடர்ந்து இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிக்கு அதிகார பசி ஏற்பட்டுள்ளது என்று அவர் கடுமையாக விமர்சித்தார். சுமார் 90 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.
பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்த தால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து வரும் 24-ம் தேதி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கட்சிக்கே நாங்கள் ஆதரவு அளிப்போம். மத்தியில் அந்த கட்சியே ஆட்சியில் அமர வேண்டும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT