குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
Updated on
1 min read

வதோதரா: குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் (மஹி) ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கம்பீரா - முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் வகையில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் காலையில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த கார், லாரி உள்ளிட்ட சில வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலரை காணவில்லை என்பதால் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று மேலும் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடைபெறுவதாகவும் வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா நேற்று தெரிவித்தார்.

இதனிடையே, சாலை மற்றும் கட்டுமானத் துறை உயர் அதிகாரிகள் நேற்று காலையில் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in