மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

Published on

புதுடெல்லி: ஒடிசா மாநிலம் புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்தனர், சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இதற்கு அலட்சியப் போக்கே காரணம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

“புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் கூட்ட நெரிசல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தது, சுமார் 50 பேர் காயமடைந்தது மிகுந்த வேதனை தருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த யாத்திரையில் சுமார் 500 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். இந்த துயரச் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம். இதை மன்னிக்கவே முடியாது.

இந்த சம்பவம் குறித்து மாநில அரசு முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதுபோன்ற விழாக்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் பெருங்கூட்டத்தை முறையான திட்டமிடல் உடன் கையாள வேண்டியது அவசியம்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன? - ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் குவிவதுண்டு. வழக்கம்போல் இந்த ஆண்டும் ரத யாத்திரைக்காக புரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில், புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in