டெல்லியில் பர்தா அணிந்து சென்று இளம்பெண்ணை 5-வது மாடியில் இருந்து தள்ளி கொன்றவர் கைது

தவுஃபீக் - நேகா
தவுஃபீக் - நேகா
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் பர்தா அணிந்து இளம் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். வடகிழக்கு டெல்லி அசோக் நகரில் 5 மாடி கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் நேகா (19). இவர் கடந்த திங்கட்கிழமை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக டெல்லி போலீஸார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பர்தா அணிந்த ஒருவர் அக்கட்டிடத்தில் நுழைவதும் பிறகு திரும்பிச் செல்வதும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் உ.பி.யின் ராம்பூரை சேர்ந்த தவுஃபீக் (26) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

இதுதொடர்பாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “தவுஃபீக்கும் நேகாவும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் குடும்பத்தினர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய தவுஃபீக் முடிவு செய்தார். இதற்கு நேகா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று தவுஃபீக் தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து நேகாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் நேகாவை மாடியில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதனை தவுஃபீக் ஒப்புக்கொண்டுள்ளார்’’ என்று தெரிவித்தன.

ஆனால் நேகாவின் தந்தை கூறுகையில், “தவுஃபீக்கை 3 ஆண்டுகளாக எங்களுக்குத் தெரியும். அவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். ஆனால் அவருக்கும் எனது மகளுக்கும் இடையே காதல் உறவு இல்லை. தவுஃபீக் கையில் எனது மகள் ராக்கி கட்டியுள்ளார்’’ என்றார். இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in