மிசோரம், கோவாவுக்கு அடுத்து முழு கல்வியறிவு பெற்ற மாநிலம் திரிபுரா

திரிபுரா முதல்வர் மானிக் சாஹா
திரிபுரா முதல்வர் மானிக் சாஹா
Updated on
1 min read

குவாஹாட்டி: மிசோராம், கோவாவுக்கு அடுத்தபடியாக 3-வது முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது. யுனெஸ்கோ விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95 என்ற இலக்கை தாண்டினால் அந்த மாநிலம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக கருதப்படும். கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 93.7 சதவீதமாக இருந்தது. 23,184 பேர் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்களாக இருந்தனர்.

இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவின் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95.6 சதவீதமாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சக இயக்குநர் ப்ரீத்தி மீனா தெரிவித்தார். இதனால் மிசோரம், கோவா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்ததாக முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது. புதிய இந்தியா எழுத்தறிவு இயக்கத்தை தீவிரமாக அமல்படுத்தியதே இந்த வெற்றிக்கு காரணம் என ப்ரீத்தி மீனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து திரிபுரா முதல்வர் மானிக் சாஹா அளித்த பேட்டியில், ‘‘ கடந்த 1961-ம் ஆண்டில் திரிபுராவின் கல்வியறிவு சதவீதம் வெறும் 20.24 சதவீதமாக இருந்தது. பல சவால்களை எதிர்கொண்டு எழுத்தறிவு திட்டம் அமல்படுத்தப்பட்டதால், திரிபுரா முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக உருவாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தனிநபர் வருமானத்தை பொருத்தவரை திரிபுரா 2-வது பெரிய மாநிலமாக உள்ளது’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in