Published : 24 Jun 2025 04:03 PM
Last Updated : 24 Jun 2025 04:03 PM
புதுடெல்லி: அனைத்து தேர்தல்களும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கண்டிப்பாக நடத்தப்படுவதாக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஜூன் 12 அன்று ஒரு நாளிதழில் எழுதிய கட்டுரையில் குற்றம் சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம், ராகுல் காந்திக்கு இமெயில் மூலம் பதில் கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், "அனைத்து தேர்தல்களும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கண்டிப்பாக நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பூத் முகவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பணியாளர்கள் முழு வாக்குப்பதிவு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, முழு தேர்தல் செயல்முறையையும் தேர்தல் குழு, சட்டமன்ற தொகுதி அளவில் பரவலாக்கப்பட்ட அதிகார முறையில் நடத்தியது. இதில் 1,00,186 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO-க்கள்), 288 தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO-க்கள்), 139 பொது பார்வையாளர்கள், 41 காவல் பார்வையாளர்கள், 71 செலவு பார்வையாளர்கள் மற்றும் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 288 தேர்தல் அதிகாரிகள் (ROS) ஆகியோர் ஈடுபட்டனர்.
தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 1,08,026 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மகாராஷ்டிரா முழுவதும் பணியில் இருந்துள்ளனர். இதில் 28,421 காங்கிரஸ் கட்சியினரும் அடங்குவர்.
தேர்தல் நடத்தியது தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில், தேர்தல் ஆணையம் ஏற்கனவே பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், உங்களுக்கு இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் எங்களுக்கு எழுதலாம். அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்க பரஸ்பரம் வசதியான தேதி மற்றும் நேரத்தில் உங்களை நேரில் சந்திக்க ஆணையம் தயாராக உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT