Published : 26 Aug 2014 07:23 PM
Last Updated : 26 Aug 2014 07:23 PM

சிரியாவை முற்றுகையிடும் அமெரிக்க ராணுவ விமானங்கள்

ஆள் இல்லாத விமானங்கள் உள்பட பல்வேறு வகை உளவு விமானங்களை சிரியாவின் வான் எல்லைக்கு அனுப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்புள்ள இடங்கள் குறித்து தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது அமெரிக்கா.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் விரைவில் தாக்குதல் நடத்தும் என்று தெரிகிறது. ஏற்கெனவே இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக சிரியாவிலும் தாக்குதல் தொடங்க இருக்கிறது.

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேயை ஐ.எஸ். தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்து வீடியோவை வெளியிட்டனர். இது அந்த தீவிரவாதிகள் மீதான அமெரிக்காவின் கோபத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர்களை முற்றிலும் ஒழித்துவிடும் நோக்கில் அமெரிக்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அமெரிக்க ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி “வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்” இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் வெள்ளை மாளிகையில் இருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசு உள்ளது. அவர்களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் அமெரிக்கா சிரியா வான் எல்லைக்குள் நுழைய முடிவெடுத்துள்ளது.

முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல், அதிபர் ஒபாமா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். எனினும் அவர்கள் எந்த விஷயம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர் என்பது தெரிவிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x