Published : 10 Jun 2025 10:13 PM
Last Updated : 10 Jun 2025 10:13 PM
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் 62 வயது நபரை தாக்கிய குற்றத்துக்காக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளியில் ஏற்பட்ட சண்டை காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2-ம் தேதி விஜே பாபு என்பவரை தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பாபு, தற்போது கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணனும், தாக்குதலுக்கு ஆளான விஜே பாபுவும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை கைகலப்பில் முடிந்துள்ளது. இதையடுத்து அண்மையில் ரி-யூனியன் நடந்துள்ளது. இதை அவர்கள் படித்த பள்ளி ஏற்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
அப்போது வகுப்பறை சண்டை குறித்து பாலகிருஷ்ணன் மற்றும் பாபுவுக்கு இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. இருப்பினும் அப்போது அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி அன்று பாபுவை இடைமறித்து பாலகிருஷ்னண் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். அவரோடு மேத்யூ என்பவரும் இருந்துள்ளார். ‘என்னை ஏன் ஸ்கூலில் அடித்தாய்?’ என பாலகிருஷணன் கேட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் பாபு தாக்கப்பட்டுள்ளார். பாபுவை மேத்யூ தாக்கி உள்ளார். அவரது முகம் மற்றும் முதுகு பகுதியை கற்களை கொண்டு தாக்கியுள்ளார். அதற்கு பாலகிருஷ்னன் உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக பாபு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பிஎன்எஸ் சட்டப்பிரிவு 126(2), 118(1), 3(5) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேத்யூ மற்றும் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT