Published : 10 Jun 2025 08:08 AM
Last Updated : 10 Jun 2025 08:08 AM
புதுடெல்லி: இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 உளவு விமானங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7 முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில் இந்திய விமானப் படையின் ட்ரோன்கள், உளவு விமானங்கள் மிக முக்கிய பங்கு வகித்தன.
தற்போது இந்திய விமான படையில் பாம்பார்டியர் குளோபல் 5000, போயிங் 707-337சி, கல்ப்ஸ்டீரிம் ஜி100 ஆகிய உளவு விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் இஸ்ரேல் தயாரிப்பான ஹெரோன் ட்ரோன்கள் மற்றும் இந்திய விமானப் படையில் இருந்து விடுவிக்கப்பட்ட மிக் 25 ரக போர் விமானங்களும் உளவு விமானங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர பல்வேறு ட்ரோன்கள், ஹெலிகாப்டர்களும் எதிரி நாடுகளை வேவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்த சூழலில் இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 அதிவீன உளவு விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் மற்றும் கனடாவின் பாம்பார்டியர் நிறுவனத்திடம் இருந்து உளவு விமானங்கள் வாங்கப்படும் என்று தெரிகிறது.
புதிதாக வாங்கப்படும் 3 உளவு விமானங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரேடார்கள், கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே அதிநவீன உளவு விமானங்கள் உள்ளன. இந்த பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணைய உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தரை, வான், கடல் பகுதிகளை கண்காணிக்கும் வகையில் 3 உளவு விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவை மிக நீண்ட தொலைவு பறக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். இரவு, பகல் மற்றும் மோசமான வானிலையிலும் இந்த உளவு விமானங்களை இயக்க முடியும். இத்திட்டத்துக்கு ஐ-ஸ்டார் என்று பெயரிடப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT