Last Updated : 31 May, 2025 03:45 PM

 

Published : 31 May 2025 03:45 PM
Last Updated : 31 May 2025 03:45 PM

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடகா அரசு அறிவுரை

பெங்களூரு: மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மே 26 அன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கோவிட்-19 பாதிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், ‘பள்ளிக் குழந்தைகளிடம் காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் காணப்பட்டால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள். முழுமையாக குணமடைந்த பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகளுடன் பள்ளிக்கு வந்தால், ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோருக்குத் தெரிவித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களிடையே இந்த அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட வேண்டும்.

கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகவில் தற்போது 234 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை 3 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x