சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக 19 இடங்களில் சிபிஐ சோதனை: 6 முக்கிய நபர்கள் கைது

சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக 19 இடங்களில் சிபிஐ சோதனை: 6 முக்கிய நபர்கள் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: ஜப்பானியர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக 19 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் 6 முக்கிய நபர்களை கைது செய்துள்ளது.

வெளிநாட்டினருக்கு எதிராக குறிப்பாக ஜப்பான் நாட்டு மக்களை குறிவைத்து இந்தியாவில் நடைபெறும் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியாளர்கள் என்று கூறி இக்கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சட்டப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையங்களை போன்று கால் சென்டர்களை இயக்கி வந்துள்ளது.

இந்நிலையில் இக்கும்பலுக்கு எதிராக டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் 19 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒருங்கிணைந்த சோதனை நடத்தினர். இச்சோதனையில் டெல்லியில் அஷு, பானிபட்டில் கபில் காக்கர், அயோத்தியில் ரோகித் மவுர்யா, வாராணசியில் சுபம் ஜெயஸ்வால், விவேக் ராஜ், ஆதர்ஷ் குமார் என 6 முக்கிய நபர்களை கைது செய்தனர். மேலும் 2 இடங்களில் மோசடி தொடர்பான கால் சென்டர்களை அகற்றினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in