சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்: ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு கருத்து

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்: ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு கருத்து

Published on

கர்னூல்: சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஒரு காலத்தில் கிராமங்களுக்கு செய்திதாள்கள் கூட வருவது கடினம். ரேடியோ மூலமாக மட்டுமே நாம் செய்திகளை அறிய முடிந்தது. யார், யார் சட்டப்பேரவைகளில் நன்றாக பேசினார்களோ அவர்களை தங்கள் அரசியல் தலைவர்களாக மக்கள் ஏற்று கொண்டு அவர்களை தேர்தல்களில் வெற்றி பெற செய்தனர். அதன் பின்னர், தொலைக்காட்சி வந்தது. தற்போது நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்து விட்டது. இது மாபெரும் மாற்றம்.

சமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வளவு நன்மைகள் உள்ளனவோ, அவ்வளவு கெடுதல்களும் நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட நபர்கள், பெண்கள் ஆகியோரை குறி வைத்தும் சமூக வலைத்தளங்கள் செயல்படுகின்றன. இதனால் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம். பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வையுடன் முன்னோக்கி செல்கிறார்.

விக்சித் பாரத் எனும் பெயரால் 2047-ல் நம் நாடு உலகிலேயே முதல் இடத்தை வகிக்கும் எனும் நம்பிக்கை எனக்குள்ளது. நான் சிறையில் இருந்தபோது ஹைதராபாத் ஐடி ஊழியர்கள் எனக்காக போராட்டம் நடத்தியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தெலங்கராகவே பிறக்க விரும்புகிறேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in