Published : 18 May 2025 06:53 AM
Last Updated : 18 May 2025 06:53 AM

இஓஎஸ்-09 செயற்கைக் கோள் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கிய இஓஎஸ்-09 செயற்கைக் கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. எனினும் சில நிமிடங்களிலேயே இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இது சூரிய ஒத்திசைவு துருவ சுற்றுப்பாதையில் (SSPO) நிலைநிறுத்தப்பட இருந்த நிலையில், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இத்திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று 101-வது செயற்கைகோள் விண்ணில் ஏவ முயற்சிக்கப்பட்டது. பிஎஸ்எல்வி -சி61 செயல்திறன் 2-வது நிலை வரை இயல்பாக இருந்தது. 3வது கட்டத்தில் ஒரு கண்காணிப்பு காரணமாக, இத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x