Last Updated : 17 May, 2025 01:03 PM

 

Published : 17 May 2025 01:03 PM
Last Updated : 17 May 2025 01:03 PM

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு: ஹரியானா மாணவர் கைது

சண்டிகர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகவும், முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் சந்தேகத்தின் பேரில் ஹரியானாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஓரளவு அமைதி திரும்பியுள்ள நேரத்தில் ஹரியானாவில் நடந்த இரண்டாவது கைது இதுவாகும்.

பாட்டியாலாவின் கல்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்கும் 25 வயது மாணவரான தேவேந்திர சிங் தில்லான், மே 12 அன்று கைதாலில் இருந்து கைத்துப்பாக்கிகளின் புகைப்படங்களை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியதற்காக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, ​​அவர் கடந்த ஆண்டு நவம்பரில் கர்தார்பூர் வழித்தடம் வழியாக பாகிஸ்தானுக்குச் சென்று பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளிடம் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரியவந்தது.

அண்டை நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் தில்லானுக்கு நிறைய பணம் செலவழித்ததாகக் கூறப்படுகிறது. முதலாமாண்டு முதுகலை மாணவரான இவர், பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட்டின் படங்களையும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக கைதல் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்தா மோடி தெரிவித்தார்.

அவரது கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தில்லானுக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் குறித்து அறிய அவரது வங்கிக் கணக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்ற குற்றச்சாட்டில் பானிபட்டில் 24 வயதான நௌமன் இலாஹி சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரிந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர், பாகிஸ்தானுக்குத் தகவல் கொடுத்ததற்காக தனது மைத்துனர் மற்றும் நிறுவன ஓட்டுநரின் கணக்கில் முகவர்களிடமிருந்து பணம் பெற்று வந்தார்.

அதேபோல, டெல்லியில் உள்ள தூதரகத்தில் நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் அதிகாரியுடன் தொடர்புடைய உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு பெண் உட்பட இரண்டு பேரை பஞ்சாப் காவல்துறை கடந்த வாரம் கைது செய்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், எல்லையில் தற்போது அமைதி நிலவுகிறது. இந்நிலையில், உள்நாட்டில் உளவுத்துறை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x