Published : 10 May 2025 05:26 PM
Last Updated : 10 May 2025 05:26 PM
புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவிவரும் சூழலில், சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தவிர, பிற நிகழ்ச்சிகளில் சிவில் பாதுகாப்பு விமானத் தாக்குதல் சைரன் ஒலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஊடக சேனல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, தீயணைப்பு சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு காவல் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவில் பாதுகாப்புச் சட்டம் 1968 பிரிவு 3 (1) (w) (i)-ன் அதிகாரத்தின் படி, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தவிர, தங்களின் பிற நிகழ்ச்சிகளில் சிவில் பாதுகாப்பு விமானத் தாக்குதல் சைரன் ஒலியைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விமானத் தாக்குதல் சைரன் ஒலிகளை மக்கள் தொடர்ந்து கேட்கும் போது அதன்மீதான எச்சரிக்கை உணர்வு குறையலாம், மேலும் உண்மையான விமானத் தாக்குதலின் போது பொதுமக்கள் அது ஊடகங்களில் ஒலிபரப்பப்படும் வழக்கமான சைரன் ஒலி எனத் தவறாக புரிந்து கொள்ளக்கூடும். சிவில் பாதுகாப்புச் சட்டம் 1968-ன் கீழ், சிவில் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளுக்கு உங்களின் மேலான ஆதரவினை எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிவில் பாதுகாப்பு திறமைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மே 7-ம் தேதி போர்க் கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதில், மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தயார் படுத்துவதே இந்த போர்க்கால ஒத்திகையின் நோக்கம். அபாயம் ஏற்பட்டால் சைரன்கள் மூலம் அபாய ஒலி எச்சரிக்கை விடுக்கப்படும். இதை கேட்டதும் மக்கள் உடனடியாக பதுங்கு குழிகள் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு சென்று மறைந்து கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் வெளிச்சம் இருக்கும் பகுதிகளை குறிவைத்துதான் குண்டு வீசப்படும். அதனால் இரவு நேரத்தில் விளக்குகளை அணைக்க வேண்டும்.
மீட்புக் குழுவினர் தயார்நிலையில் இருப்பதை சரிபார்க்க வேண்டும். தாக்குதல் அபாயம் உள்ள பகுதியில் இருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT