Published : 08 May 2025 06:33 PM
Last Updated : 08 May 2025 06:33 PM

“கவுடில்யரின் தத்துவத்தை பிரதமர் மோடி செயல் வடிவில் காட்டியுள்ளார்” - ஜக்தீப் தன்கர் புகழாரம்

புதுடெல்லி: “நமது பிரதமர் மோடி, கவுடில்யரின் தத்துவத்தை செயல் வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்” என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா அறக்கட்டளையைச் சேர்ந்த கவுடில்யா அமைப்பின் பிரதிநிதிகளுடன் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் புதுடெல்லியில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர், “நமது பிரதமர், ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர். பெரிய அளவிலான நம்பிக்கை கொண்டவர். மிகப் பெரிய மாற்றத்தின் மீது அவர் அளப்பரிய நம்பிக்கை கொண்டுள்ளார்.

பத்தாண்டு கால நிர்வாகத்திற்குப் பிறகு, அரசின் முடிவுகள் அழியாத சுவடுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பல தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஒருவரை நாம் பெற்றுள்ளோம். அதுதான் அனைத்து விதமான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. 'எதிரியின் எதிரி ஒரு நண்பன்" என்று கூறியவர் கவுடில்யர். கவுடில்யரின் இந்த தத்துவத்தை செயல்வடிவில் எடுத்துக் காட்டியுள்ளார் நமது பிரதமர்.

இந்த நாட்டில் புதுமையான நிர்வாகம் நடைமுறையில் உள்ளது. நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களுக்கு அதிகாரிகள் செல்வதற்குத் தயங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சியில் பின்தங்கியுள்ள அத்தகைய மாவட்டங்களுக்கு 'முன்னேற விரும்பும் மாவட்டங்கள்' என்று பெயரிட்டடார். தற்போது அவை வளர்ச்சியில் முன்னணி மாவட்டங்களாக மாறிவிட்டன.

தொழில்முனைவோருக்கு வசதிகள் கிடைக்கும் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் மக்கள் பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள் என்று கருதிய பிரதமர், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களும் பொருளாதார நடவடிக்கைகளின் மையங்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில், ‘மன்னரின் மகிழ்ச்சி அவரது குடிமக்களின் மகிழ்ச்சியில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக இயங்கும் எந்தவொரு நாட்டின் அரசியலமைப்புக் சட்டத்தையும் உற்று நோக்கினால், இந்தத் தத்துவம் ஜனநாயக ஆட்சி முறை மற்றும் அதன் விழுமியங்களின் அடிப்படையான ஆன்மா மற்றும் சாரத்தைக் காண முடியும்.

இந்தியாவில், ஜனநாயகம் நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததாலோ அல்லது அந்நிய ஆட்சியிலிருந்து நாம் சுதந்திரம் பெற்றதாலோ தொடங்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் ஒரு ஜனநாயக நாடாக இருக்கிறோம். மேலும் இந்த வெளிப்பாடு மற்றும் உரையாடல், வேத கலாச்சாரத்தில் அனந்த் வாத் என்று அறியப்படுகிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x