Last Updated : 02 May, 2025 04:38 PM

 

Published : 02 May 2025 04:38 PM
Last Updated : 02 May 2025 04:38 PM

‘குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த முதியோர் நல்வாழ்வு அவசியம்’ - திரவுபதி முர்மு

புதுடெல்லி: ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் தூண்களாக மூத்த குடிமக்கள் விளங்குவதாகவும், குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த அவர்களின் நல்வாழ்வு அவசியம் என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

'கண்ணியத்துடன் கூடிய முதுமை' எனும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “நமது கடந்த காலத்துடன் ஒரு முக்கிய இணைப்பாகவும், நமது எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் மூத்த குடிமக்கள் திகழ்கிறார்கள். நமது மூத்த குடிமக்கள் ஞானம், விவேகம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். அவர்களின் கண்ணியம் மற்றும் ஆரோக்கியம் ஒரு பகிரப்பட்ட கடமை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அவர்களின் இருப்பை மதிப்பதும், அவர்களின் வழிகாட்டுதலை மதிப்பதும், அவர்களின் தோழமையை மதிப்பதும் முக்கியம். முதியோர் வாழ்வில் கண்ணியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கியுள்ளதற்காக நான் பாராட்டுகிறேன். மூத்த குடிமக்களுக்காக ஒரு பிரத்யேக போர்டல் தொடங்கப்பட்டதற்கு எனது பாராட்டுக்கள். இது அவர்களின் தேவைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான டிஜிட்டல் தளம்.

70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் போன்ற மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மரபுகளில் பொதிந்துள்ளது. பல வீடுகளில், குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெரும்பாலும், குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் கூறும்போது ஏற்றுக்கொள்ளாததை, தாத்தா பாட்டி சொல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

பெரியவர்கள் தங்கள் குடும்பங்கள் செழித்து வளர்வதைக் காணும்போது, ​​அவர்களின் உடல் மற்றும் மன நல்வாழ்வும் மேம்படும். அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணர்ச்சித் தூண்களாக உள்ளனர்.

இருப்பினும், முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலால், இளைஞர்கள் பெரும்பாலும் வேலைகளுக்காக இடம்பெயர்கிறார்கள். அன்பு மற்றும் மரியாதையை விரும்பும் பெரியவர்களை அவர்கள் விட்டுச் செல்கிறார்கள். சில சமயங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வாழ்ந்தாலும், அவர்களுக்குத் தகுதியான பாசமும் கண்ணியமும் கிடைப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக, சிலர் முதியவர்களை ஒரு சுமையாகக் கூட கருதுகிறார்கள்.அவர்கள் அறிவின் களஞ்சியம். இளைஞர்களை வழிநடத்தவும், நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்தவும் தேவையான திறன்களைக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். அவர்களால் நமது சமூகத்தையும் நாட்டையும் அதிக செழிப்பை நோக்கி அழைத்துச் செல்ல முடியும்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x