Published : 30 Apr 2025 09:27 AM
Last Updated : 30 Apr 2025 09:27 AM
ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் 6-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவ தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் உரி, நவுகம், ராம்பூர், கெரன், குப்வாரா, பூஞ்ச் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக இந்திய, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
‘பாகிஸ்தான் ராணுவ நிலைகளில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை துப்பாக்கிச் சூடு நீடித்தது. ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது’ என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய, பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதி மக்கள் பதுங்கு குழிகளை அமைத்துள்ளனர். பல்வேறு கிராமங்களில் ராணுவத்தின் உதவியுடன் மிகப் பெரிய ரகசிய பதுங்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பதுங்கு அறைகளில் சமையலறை, கழிப்பறை, படுக்கை வசதி, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
போர்ப் பதற்றம் அதிகரிப்பு: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே.திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். பிரதமரின் இல்லத்தில் சுமார் 90 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
எவ்வாறு தாக்குதல் நடத்துவது, எந்த இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும், எப்போது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம். இந்த விவகாரத்தில் முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம்” என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவமும், மத்திய ஆயுத போலீஸ் படையும் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு ராணுவம் சார்பில் நேற்று சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) கமாண்டோக்கள், மாநில போலீஸார் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர். ஜம்மு பகுதியில் உள்ள இந்து கோயில்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், ராணுவம் தரப்பில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நேற்று என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT