Published : 30 Apr 2025 12:12 AM
Last Updated : 30 Apr 2025 12:12 AM
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். எப்போது, எங்கு, எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம் என்றும், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே.திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
பிரதமரின் இல்லத்தில் சுமார் 90 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். எவ்வாறு தாக்குதல் நடத்துவது, எந்த இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும், எப்போது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம். இந்த விவகாரத்தில் முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம்" என்று தெரிவித்தார்.
அமித் ஷா ஆலோசனை: முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன், எல்லை பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ், தேசிய பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைவர்கள், இயக்குநர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவமும், மத்திய ஆயுத போலீஸ் படையும் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு ராணுவம் சார்பில் நேற்று சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) கமாண்டோக்கள், மாநில போலீஸார் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர். ஜம்மு பகுதியில் உள்ள இந்து கோயில்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், ராணுவம் தரப்பில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நேற்று என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
காஷ்மீரில் புதிய தளபதி: காஷ்மீரின் உதம்பூரில் இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. காஷ்மீர், லடாக் எல்லைப் பகுதி கட்டுப்பாடு முழுவதும் வடக்கு பிராந்தியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிராந்திய தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் சுசீந்திர குமார் பணியாற்றி வந்தார். அவர் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
இந்த சூழலில் ராணுவ வடக்கு பிராந்திய தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
துப்பாக்கி சண்டை: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய, பாகிஸ்தான் எல்லையில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. உரி, நவுகம், ராம்பூர், கெரன், குப்வாரா, பூஞ்ச் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக இந்திய,பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதி மக்கள் பதுங்கு குழிகளை அமைத்துள்ளனர். பல்வேறு கிராமங்களில் ராணுவத்தின் உதவியுடன் மிகப்பெரிய ரகசிய பதுங்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பதுங்கு அறைகளில் சமையலறை, கழிப்பறை, படுக்கை வசதி, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT