Published : 21 Apr 2025 06:36 PM
Last Updated : 21 Apr 2025 06:36 PM
புதுடெல்லி: ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 8 நக்சலைட்டுகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான அரசின் நடவடிக்கை தொடரும் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். மேலும், நக்ஸல்களுக்கு எதிரான இந்த தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் லுகு பஹார் பகுதியில் இடதுசாரி தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். காலை 5.30 மணி முதல் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், சிபிஐ (மாவோயிஸ்ட்) மத்திய குழு உறுப்பினர் விவேக் உட்பட எட்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில், விவேக் தலைக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நக்சல்களை ஒழிப்பதற்கான எங்கள் முயற்சி தடையின்றி தொடர்கிறது. நக்சல்களை வேரோடு ஒழிப்பதற்கான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் இன்று மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.
ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள லுகு மலைகளில் நடந்த மோதலில், 8 மாவோயிஸ்டுகள் வீழ்த்தப்பட்டனர். இதில் ஒரு உயர்மட்ட நக்சல் தலைவரான விவேக்கும் ஒருவர். அவர் குறித்த தகவலை தருவோருக்கு ரூ.1 கோடி வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டு மோசமான நக்சல்களும் இதில் அடங்குவர். நமது பாதுகாப்புப் படைகளுக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT