Last Updated : 31 Jul, 2018 10:05 PM

 

Published : 31 Jul 2018 10:05 PM
Last Updated : 31 Jul 2018 10:05 PM

“வங்கதேசத்தினரையும், ரோஹிங்கியா மக்களையும் சுட்டுத்தள்ளுங்கள்”: பாஜக எம்எல்ஏ கொலைவெறிப் பேச்சு

இந்த தேசத்தை விட்டு வெளியேறாவிட்டால், வங்கதேச மக்களையும், ரோஹிங்கியா மக்களையும் சுட்டுத் தள்ளுங்கள் என்று பாஜக எம்எல்ஏல ராஜா சிங் கொலைவெறியுடன் பேசியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அந்த மாநில அரசு தயாரித்துள்ளது. அதில் ஏறக்குறைய 40 லட்சம் பேர், அகதிகள், சட்டவிரோதமாக நாட்டுக்கள் வந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த குடிமக்கள் பதிவேட்டை கடைபிடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டை துண்டாட பாஜக முயற்சி செய்து வருகிறது, இதனால் உள்நாட்டு போர் வெடித்து, ரத்தக்களறியாகும் என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடு அமைதியாக இருக்க வேண்டுமானால், வங்கதேச மக்களும், ரோஹிங்கியா முஸ்லிம்களும் வெளியேற்றப்பட வேண்டும். இவர்கள் தேசத்துக்கு ஆபத்தானவர்கள். வெளிநாட்டினரை எப்படி நம்நாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதுபோன்ற கிருமிகளை நாம் நாட்டுக்குள் சேர்க்கத் தேவையில்லை.

ரோஹிங்கியா முஸ்லிம்களையும், வங்கதேசத்தினரையும் நாட்டை விட்டு அனுப்ப மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தான சட்டவிரோத அகதிகளை மற்ற நாடுகள் சுட்டுத் தள்ளுவார்கள். அதுபோல், ரோஹிங்கியா முஸ்லிம்களும்,வங்கதேச மக்களும் அமைதியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்.

இவ்வாறு டி ராஜா சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x