Last Updated : 21 Apr, 2025 08:20 AM

3  

Published : 21 Apr 2025 08:20 AM
Last Updated : 21 Apr 2025 08:20 AM

நீதித் துறையை எம்.பி.க்கள் விமர்சித்தது தனிப்பட்ட கருத்து: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கருத்து

புதுடெல்லி: பாஜக எம்.பி.க்கள் நீதித் துறை மீது விமர்சனம் செய்தது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தொடர்ந்த ஒரு வழக்கில், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறும்போது, “நாட்டில் மத ரீதியிலான போரை தூண்டும் வகையிலும் வரம்பு மீறியும் உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது” என்றார்.

இதுபோல மற்றொரு பாஜக எம்.பி. தினேஷ் சர்மா கூறும்போது, “அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு யாரும் உத்தரவிட முடியாது” என்றார்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா நேற்று எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் நீதித் துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து தெரிவித்த கருத்துகளுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை அவர்களுடைய தனிப்பட்ட கருத்து ஆகும். ஆனால் இதுபோன்ற கருத்துகளை பாஜக ஒருபோதும் ஆதரித்ததும் இல்லை, ஏற்றுக்கொண்டதும் இல்லை. அவர்களுடைய கருத்தை பாஜக முற்றிலும் நிராகரிக்கிறது.

நீதித் துறையை பாஜக மதிக்கிறது. நீதிமன்றங்களின் உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளை பாஜக எப்போதும் ஏற்றுக் கொள்ளும். ஏனெனில், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். அத்துடன் அரசியலமைப்பை பாதுகாக்கும் முக்கிய தூணாகவும் விளங்குகிறது” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x