கோவா மாநிலத்தில் கோயில் தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு வாங்கிய பக்தர்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பனாஜி: ஒரு தேங்காய் விலை ரூ.10 லட்சமா? ஆம். கோவா மாநில கோயில் தேங்காயைத்தான் ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கி உள்ளார் ஒரு பக்தர்.

கோவா மாநிலம், வடக்கு கோவா மாவட்டம், பெர்னெம் நகருக்கு அருகே உள்ள கோர்காவ் கிராமத்தில் ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை வருடாந்திர திருவிழா நடைபெற்றது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் பெர்னெம் நகரம் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். இவ்விழாவின் இறுதியாக, சுவாமிக்கு படைத்த தேங்காய் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது, ஒரு பக்தர் அந்த புனித தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். இதை அவர் தனது வீட்டில் வைத்து வழிபடுவார் என கூறப்படுகிறது.

இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது, புனித தேங்காய் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் போனது.

திருவிழாவின்போது, வாழைப்பழம், தற்பூசணி, அன்னாசி உள்ளிட்ட பழங்கள் சுவாமிக்கு படைக்கப்படுவது வழக்கம். விழாவின் முடிவில் இவை அனைத்தும் கோயில் நிர்வாகக் குழுவினரால் ஏலத்தில் விடப்படும். இதன்மூலம் திரட்டப்படும் நிதி, கோயில் நிர்வாகப் பணிகளுக்கும் சமுதாய சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என கோயில் நிர்வாகக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in