

புதுடெல்லி: சமண மதத்தின் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரரின் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அகிம்சை, உண்மை மற்றும் கருணையை எப்போதும் வலியுறுத்திய பகவான் மகாவீரருக்கு நாங்கள் அனைவரும் தலைவணங்குகிறோம். உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு மகாவீரரின் லட்சியங்கள் பலத்தை அளிக்கின்றன.
அவரது போதனைகள் சமண சமூகத்தினரால் அழகாக பாதுகாக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. பகவான் மகாவீரரால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி சமூக நலனுக்கு பங்களித்துள்ளனர்.
மகாவீரரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற எங்களது அரசு எப்போதும் பாடுபடும். கடந்த ஆண்டு பிராகிருத மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. இந்த முடிவு பலராலும் பாராட்டப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.