2 நாள் பயண​மாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

2 நாள் பயண​மாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் முதல் முறையாக நேற்று இந்தியா வந்தார். அவரை டெல்லி பாலம் விமான நிலையத்தில், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார்.

இளவரசர் முகமது பின் ரசீத்துக்கு, பிரதமர் மோடி நேற்று மதிய விருந்தளித்தார். இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மும்பை செல்லும் இளவரசர் முகமது பின் ரசீத், மும்பை தொழிலதிபர்களை சந்தித்து கட்டமைப்பு, எரிசக்தி, நிதிதொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

துபாய் இளவரசரின் வருகை குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘ துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவரது பயணம், இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் உறவில் மிக முக்கியமானது’’ என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in